சிந்தனைக்கு விருந்து

இந்தத் தொடர், தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்துப் பரவலாக அறியப்படாத ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு தகவல்களைத் தாங்கி வருகிறது.

Series
This section features information, ideas and views to stimulate reflection and dialogue. We welcome contributions.



சிங்கப்பூரில் சாதி
தமிழ், சீன (ஹொக்கியன் – Hokkien) இனக்கலப்புள்ள மூதாதையரைக்கொண்ட சிங்கப்பூரரான முனைவர் ஜான் சாலமன் (John Solomon), தற்போது மெல்பர்ன் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி (Trinity) கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அதற்குமுன் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசியராக (2016-2022) பணியாற்றினார். இளநிலைப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) பல்கலைக்கழகத்தில் பெற்றார். புலம்பெயர்தல், காலனியாக்கத்தின் பண்பாட்டுத் தாக்கம், இனம் என்னும் கருத்தாக்கம் ஆகியவை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். தேசிய, இன அடையாளங்கள் மீதும் குறிப்பாக அவை எவ்வாறு கட்டமைத்துப் பராமரிக்கப்படுகின்றன என்பதிலும் அவற்றின் வரலாற்றுப் பின்புலங்களின்மீதும் ஆய்வு ஆர்வமிக்கவர். சிங்கப்பூரில் தீண்டாமை குறித்தும் சாதி குறித்தும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வெளியான அவரது நேர்காணலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் உங்கள் சிந்தனைக்கு விருந்தாக…

சிங்கப்பூரில் சாதி மறைந்துவிட்டதா?
சமுதாய வேற்றுமை, உயர்வுதாழ்வு கற்பித்தல் என்கிற அளவில் சாதி பொதுவெளியில் கிட்டத்தட்ட இங்கு மறைந்துவிட்டது. குடும்பத்தின் தேர்வுகளில் இன்னும் சாதி இருக்கிறதா என்பதைத் தற்காலச் சமுதாயத்தை ஆராயும் ஆய்வாளர்கள்தாம் சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்தவரை சில குடும்பங்கள், குழுக்கள் அவர்களது சாதிகளைக் குறித்து அறிந்திருக்கின்றனர். அவர்களும் அதைப் பண்பாட்டு வேறுபாட்டுக்கான காரணமாகத்தான் பார்க்கின்றனரேயொழிய உயர்வுதாழ்வு என்ற ரீதியில் அல்ல. மேலும் சிலர் சாதியை இனக்குழு அடையாளமாகக் குறிப்பிடுகின்றனர். அதுவும் இந்தியாவில் இருக்கும் உறவுக்குழுக்களோடு அடையாளப்படுத்திக் கொள்ளத்தானேயொழிய மேல்கீழ் பார்ப்பதற்கன்று. எழுபதுகளில் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சமூகவியல் ஆய்வுகளில் அப்போதே பலரும் சாதியைவிடப் பொருளாதார நிலையும் தொழில் நிமித்தமான பதவிகளும்தான் தங்கள் பிள்ளைகளின் கணவன் அல்லது மனைவி தேர்வுக்கு முக்கியமானவைகளாக இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
‘உயர்ந்த’ சாதியினருக்குப் பொதுவாக அவர்களின் சாதிப்பின்புலத்தைக் குறித்து அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதிலும்கூட பிராமணர் போன்ற உயர்சாதிகளிடையே இங்குத் தங்கள் சாதி குறித்த ஒருவித சங்கடமான உணர்வே நிலவுகிறது என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்குக் காரணம் சமூகநீதி, ஏற்றத்தாழ்வு கற்பித்தல், பிறப்பின் அடிப்படையில் சலுகைகளை அனுபவித்தல் ஆகியவற்றுடன் சாதி பிணைந்திருப்பதே. சிலருக்குத் தங்கள் சாதி தெரிந்திருந்தாலும் பல சிங்கப்பூர் இந்தியர்களுக்குத் தம் சாதி குறித்து அறவே ஏதும் தெரியாது. அவர்களின் பெற்றோரோ மூதாதையரோ சாதி அடையாளம் தங்களோடு போகட்டும் என்று கருதிக் கவனமாகச் செயல்பட்டதன் காரணமாகத்தான் இது நடந்திருக்க முடியும். சிங்கப்பூரின் தற்காலச் சமுதாயத்தில் சாதியின் முக்கியத்துவம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பதையும் இது உணர்த்துகிறது.
உலக அளவில் வேறு பண்பாடுகளில் சாதி அமைப்பு உண்டா?
ஆசியப் பண்பாடுகளைக் கணக்கிற்கொண்டு பார்க்கும்போது, ஜப்பானியரின் பிறப்பின் அடிப்படையிலான ஓர் அமைப்பு இந்திய சாதியமைப்புக்கு நெருக்கமாக வருகிறது. அங்கிருந்த ‘புராகுமின்’ (Burakumin) மக்களின் அனுபவங்களை இங்குள்ள தீண்டப்படாதவர்களின் பாடுகளுக்கு இணைவைக்கலாம். நானறிந்தவரை சீன, மலாய் இனத்தினரிடையே சாதியமைப்புகள் ஏதுமில்லை. முக்கியமான பல சீனப் பேரரசர்கள் எளிமையான விவசாயிகளாக இருந்தவர்கள். அதேவேளையில் இவ்விரண்டு இனங்களிலும் வர்க்கம் ஒரு முக்கியமான விஷயமாக இருந்துள்ளது. காலனி ஆதிக்கக் காலத்தில் சீனர்களும் மலாய்க்காரர்களும் இந்தியரின் சாதியமைப்பை ஆர்வத்தின் காரணமாகக் கவனித்தனர் என்றாலும் அது இன்னொரு சமூகத்தின் வழக்கம் என்று புரிந்துகொண்டுவிட்டனர்.
பிற புலம்பெயர்ந்த இந்தியச் சமூகங்களோடு ஒப்பிடும்போது சிங்கப்பூரில் சாதி எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டுள்ளது?
பொருளாதார முன்னேற்றம் கண்டுவிட்ட மேலை நாடுகளுக்குச் அண்மைக் காலங்களில் புலம்பெயர்ந்தவர்களிடையே சாதி அடையாளமும் ஏற்றத்தாழ்வு கற்பித்தலும் அழுத்தமாக உள்ளது. இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சக இந்தியரிடமிருந்து தலித்துகள் ஒதுக்குதலை எதிர்கொள்கின்றனர். பழமையான புலம்பெயர் சமூகங்களில் ஒன்றான சிங்கப்பூர் இந்திய சமூகம் பல்வேறு காலகட்டங்களில் இங்குக் குடியேறியதன் காரணமாகச் சாதி குறித்த மனப்பான்மை அடிப்படையிலேயே மாறியிருக்கிறது. சிங்கப்பூர்ச் சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைவது உட்பட பல காரணிகளால் பாதிக்கப்பட்ட இன்றைய சிங்கப்பூர் இந்திய சமூகம் கிட்டத்தட்ட சாதி அமைப்பை இங்கு நிராகரித்துவிட்டது.
‘சாதியைப் பண்பாடாக்குவது’ தவிர்க்கவியலாத ஒன்றா?
இல்லை. சாதியைப் பாதுகாப்பது உலகமயமாக்கச் சூழலின் தவிர்க்கப்படவியலாத விளைவாகவோ பண்பாட்டுக்கூறுகள் தேய்ந்து காணாமற்போய்விடும் என்கிற அச்சத்தால் உந்தப்பட்டோ நடப்பதாக நான் நினைக்கவில்லை. ஏதாவது ஒரு குழு அல்லது சமூகம் அதிகாரத்தையோ சலுகைகளையோ தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வழியிருந்தால் அதை நியாயப்படுத்தவும் தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ளவும் கருத்தியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியிலும் பண்பாட்டுக்கூறுகளாக ஆக்குவதன் வழியாகவும் முயல்கிறது. உலகமயமாக்கத்துக்கு முன்னரே சாதி ஓர் உடும்புப்பிடியான சமூக நிறுவனமாக இருந்ததைக் காணமுடிகிறது. ஆகவே காலசூழ்நிலைகளுக்கு ஏற்றபடி பல்வேறு வடிவங்களில் தன்னைத் தகவமைத்துக்கொண்டு காத்துக்கொள்ளக்கூடிய வல்லமையுள்ளதாகச் சாதி இருக்கிறது. ‘சாதியைப் பண்பாடாக்குதல்’ அல்லது ‘சாதி ஓர் இன அடையாளம் மட்டுமே’ போன்ற சொல்லாடல்கள் பல நேரங்களில் சாதியின் தகவமைத்துக்கொள்ளும் திறனைப் புலப்படுத்துவதாக இருப்பதாகவே நினைக்கிறேன்.
ஆதாரம்
தி சிராங்கூன் டைம்ஸ், டிசம்பர் 2019 https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=6046f6d0-7c49-493f-9626-e7b14697dd5e

சிங்கப்பூரில் நீங்கள் எந்த வகை இந்தியர்?
உலகளாவியப் புலம்பெயர்தல் நம் சமகால வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. அதுவும் மக்கள்தொகை சரியாமல் பேணிக்கொள்ளத் தேவையான கருவளவிகிதம் இல்லாத சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் பிற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து மக்கள் வருவது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிட்டது. புதிய சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்வதில் புலம்பெயர்ந்தோர் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும், புதியமண்ணில் அவர்கள் வேர்விடத் தொடங்கும்போது அங்குள்ள சமுதாயத்துடன் ஒருங்கிணைவது அடுத்தகட்டச் சவால். இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்தல் கணிசமாக அதிகரித்தக் கடந்த கால்நூற்றாண்டில், உள்ளூர் இந்தியர்-புலம்பெயர் இந்தியர் ஒருங்கிணைவும் அவ்வாறு பல சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டது, இப்போதும் எதிர்கொள்கிறது. இந்த ஒருங்கிணைவு தொடர்பான சிக்கல்களையும் உராய்வுகளையும் ஆராய்ந்துள்ள முனைவர் லாவண்யா கதிரவேலு, தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் (மார்ச் 2021) ஒரு நேர்காணல் அளித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகளைச் சுருக்கி இங்கே தந்துள்ளோம் – உங்கள் சிந்தனைக்கு விருந்தாக…

ஒருங்கிணைவை எப்படி வரையறுப்பது?
ஒரு சமுதாயத்தின் பொதுவான வழமைகள், விழுமியங்கள், அமைவுகள் (structures) ஆகியவற்றோடு தனிமனிதர்கள் அல்லது சமூகங்கள் எந்த அளவுக்குப் பொருந்திப் போகின்றனர் என்பதையே சமுதாய ஒருங்கிணைவுக்கு ஒரு பொது வரையறை எனலாம். நடைமுறையில் ஒருங்கிணைவை அளக்கும் அளவீடுகள் என்றால், புலம்பெயர்ந்த ஒருவர் புதிய மண்ணின் மொழியைக் கற்பது, கல்வி பெறுவது, ஊழியரணியுடன் ஒன்றிணைவது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை ஒருங்கிணைவுக்கு உரமூட்டும் வழிகளாக உள்ளன. மேலும், வழிபாட்டுத் தலங்கள், சமூகக் குழுக்கள் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளின் வழியாகச் சமுதாயத்தில் நட்புறவு, தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் ஒருங்கிணைவுக்கான வழிகளே.
சிங்கப்பூரில் ஒருங்கிணைவு எப்படி உள்ளது?
பிற நாடுகளோடு ஒப்பிடும்போது சிங்கப்பூரில் புலம்பெயர்ந்தோர் ஒருங்கிணைவு மிக நன்றாக உள்ளது என நினைக்கிறேன். ஒருங்கிணைதல் தொடர்பிலான வன்முறைச் சம்பவங்கள் ஏதுமில்லை என்பதோடு அன்றாட வாழ்க்கைப் பயணமும் சுமூகமாகவே நீடிக்கிறது. இந்த சுமூகமான பயணம் எப்போதுமே இப்படித்தான் இருக்கும் என்று அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்பதே சிங்கப்பூருக்கான சவால். மேலும், ஒருங்கிணைவு விஷயத்தைப் பொறுத்தவரை, மேம்போக்காகத் தென்படுவனவற்றை மட்டுமின்றி அதனடியில் மறைந்திருக்கும் உரசல்களைக் கண்டறிவதும் அதற்கான தீர்வுகளை நாடுவதும்கூடச் சவாலானதுதான். ஒரே தாய்மண்ணைக் கொண்டவர்கள் என்பதோ ஒரே இனம் என்பதோ புலம்பெயர்தலின்போது அவர்களுக்குள் ஒருங்கிணைவை எளிமையாக உண்டாக்கிவிடும் என்று அனுமானிப்பது பிரச்சனைக்குரியது. என்னுடைய ஆய்வின் அடிப்படையிலும் சரி, பிற ஆய்வாளர்களின் முடிவுகளின்படியும் சரி இக்கருத்து தொடர்ந்து உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரு நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையே நல்ல ஒருங்கிணைவு இல்லை என்றால், ‘இது நமக்கான நாடு’ என்னும் பிணைப்பும் விசுவாசமும் சில குழுவினரிடையே குறைவாக உணரப்படுகிறது என்று பொருள். அத்தகைய சூழல் ஒருமைப்பாட்டுடன்கூடிய தேசத்தை உருவாக்கும் முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கலாம். இவ்விஷயத்தில் இந்தியச் சமூகத்திற்குள்ளேயே குறிப்பிடத்தக்க அளவில் இறுக்கம் இருப்பதையும் அதனால் உரசல்கள் நிகழ்ந்துள்ளதையும் ‘Navigating Differences – Integration in Singapore’ என்னும் நூலிலுள்ள எனது இயலில் விவாதித்துள்ளேன். அதில் சிங்கப்பூரில் நிகழ்ந்த சம்பவங்களையே எடுத்துக்காட்டுகளாவும் அளித்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் வாசித்துப் பார்க்கலாம்.
ஒருங்கிணைவு தொடக்ககாலச் சிக்கலா? நிரந்தரப் பிரச்சனையா?
உள்ளூர் இந்தியர்-புலம்பெயர் இந்தியர் ஒருங்கிணைவு, சிங்கப்பூரில் முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோர் மட்டுமே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை எனச் சிலர் கருதுகின்றனர். அப்படியில்லை. புலம்பெயர்ந்தோரில் முதல் தலைமுறையினர் அனைவருக்கும் அதிநிச்சயமாக இங்கே ஒருங்கிணைவுச் சிக்கல் உள்ளது என அனுமானிக்கக் கூடாது. சிலர் மற்றவர்களைவிட விரைவாக உள்ளூர் இந்தியச் சமூகத்துடன் ஒருங்கிணைந்துவிடுகின்றனர். ஆகவே பொதுமைப்படுத்துவதில் கவனம் தேவை. புலம்பெயர்ந்தோருக்கு, புதிய மண்ணின் சமுதாயத்துடன், இரண்டாம் தலைமுறையில் தொடங்கி அடுத்தடுத்த தலைமுறைகளில் மேம்பட்ட ஒருங்கிணைவு நிகழ்வதைப் புலம்பெயர்வு குறித்த பெரும்பாலான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும் இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. குறிப்பாக இனம், வர்க்கப் பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைவு ரீதியான கட்டுப்பாடுகளைக் கொண்ட சமுதாயங்களில் புலம்பெயர்ந்தோர் பல தலைமுறைகளாக மையப்போக்குடன் ஒன்றிணைய இயலாமலேயே நீடிக்கின்றனர். ஒரே இன மக்களிடையே உள்ள பண்பாட்டு வேறுபாடுகள் அவர்களுக்குள் சில எல்லைக்கோடுகளை வரைந்துகொள்வதற்கும் மேல்கீழ் பார்ப்பதற்கும் வழிசெய்கின்றன. சமூக-பொருளாதார நிலை, மதம், மொழி, பிறந்தநாடு ஆகியவையும் பிரிவினைகளை உருவாக்குகின்றன. சிங்கப்பூரின் சீன சமூகத்திலும் இது உண்டு. மேலும், சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த இந்தியச் சமூகத்தினரிடையே பிரிவினைகளோ மேல்கீழ் பார்ப்பதோ கிடையாது என்று நாம் அனுமானித்துக்கொள்ளவும் கூடாது.
இந்தியாவைக் குறித்த உள்ளூர்ப் பார்வையின் தாக்கம்
உள்ளூர் இந்தியர் உள்ளிட்ட சில சிங்கப்பூரர்களுக்கு, இந்தியா மோசமான சுகாதாரச் சூழலும், பாலின சமத்துவமின்மையும், உற்பத்தித் திறன் குறைபாடுகளும் கொண்ட ஒரு ‘மூன்றாம் உலக’ நாடு என்னும் எண்ணமுண்டு. அத்தகைய எண்ணம் அங்கிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயரும் இந்தியரைக் குறித்து ‘இவர்கள் இப்படித்தான்’ (stereotypes) என்னும் கண்ணோட்டத்தை அவர்கள் உருவாக்கிக்கொள்ள வழிவகுக்கிறது. இவ்விரு குழுவினரிடையே சமுதாய அளவிலான உறவுகள், தொடர்புகள் மேம்படுவதையும் அக்கண்ணோட்டம் பாதிக்கிறது. மொழி, மதம், உணவு போன்ற பல விஷயங்கள் பல சமயங்களில் சிங்கப்பூர் இந்தியருக்கும் புலம்பெயர் இந்தியருக்கும் பொதுவானவை. மேலும் இந்தியச் சமூகத்திற்குள் பண்பாட்டு மேம்பாடு, இந்நாட்டுக்குப் பங்களிக்கும் வேட்கை ஆகியவற்றையும் பொது அம்சங்களாகக் குறிப்பிடலாம். இருப்பினும் வேறுபட்ட பின்புலங்களைக்கொண்ட பல நாடுகளிலிருந்து வருவோர் பல்வேறு வேறுபாடுகளோடுதான் வருவர் என்ற அனுமானத்தோடு தொடங்குவதே சரியானவழி என நினைக்கிறேன். பிறகு அந்த வேறுபாடுகளைத்தாண்டி அவர்களோடு ஒருங்கிணைந்து வாழ்வதற்கான வழிகளை நாம் கண்டறியவேண்டும்.
தகுதிக்கு முன்னுரிமை அளிப்பது ஒருங்கிணைவை பாதிக்குமா?
தகுதிக்கு முன்னுரிமை (meritocracy) என்னும் அடிப்படியில் நிகழும் புலம்பெயர்வு சமுதாய ஒருங்கிணைவை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறித்து நான் ஆராயவில்லை. ஆனால் சிங்கப்பூரும் ஏனைய பல நாடுகளையும்போலவே மேலான தொழில்திறன் உள்ளவர்களைக் குடியேற அனுமதிக்கிறது. அவர்களின் மதிப்பைச் சிங்கப்பூர் உணர்ந்திருக்கிறது. ஆகவே தகுதியடிப்படையிலான சேர்க்கை என்பதைத் திறமைசாலிகளைக் கைப்பற்றுவதில் உலக நாடுகளுக்கிடையிலான போட்டி எனலாம். ஆங்கிலம் பேசும் திறன் சமுதாய ஒருங்கிணைவில் முக்கியமானதாகக் கருதப்படுவதைக் கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. அதைப்போலவே சிங்கப்பூரின் தனித்துவத்துடன் பேசப்படும் ஆங்கிலமான சிங்கிலீஷைப் பயன்படுத்துவதும் சிங்கப்பூரர் என்ற அடையாளத்தை வலுப்படுத்தும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே சரியான வகையில் அல்லது போதிய அளவில் சிங்கிலீஷ் பயன்படுத்த இயலாவிட்டால் “சிங்கப்பூரர்தன்மை” இல்லாதவர் என ஒருவர் கருதப்படலாம். இருப்பினும், சிங்கிலீஷிலும் பல வகைகள் இருக்கின்றன என்பதை மொழியியலாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். ஆகவே ஒரேயொரு தரப்படுத்தப்பட்ட சிங்கிலீஷ் பயன்பாட்டை எதிர்பார்ப்பதும் பிரச்சனைக்குரியதே.
இனக் கண்ணோட்டமும் தொடர்பு கோட்பாடும்
ஒருங்கிணைவை உண்டாக்குவதில் பல காரணிகள் ஒருசேரப் பங்காற்றுகின்றன. மேலும் ஒருங்கிணைவு என்பது நீண்டகால அளவில் தொடர்ந்த முயற்சிகளைக் கோரும் ஒன்று. அரசுக்கொள்கை என்னும் நிலையில் பார்த்தால், சிங்கப்பூரில் பல்வேறு இனங்களை வகைப்படுத்தும் முறைமையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். முன்னொரு காலத்தில் இருந்த அதே அர்த்தத்தில் இன்று அந்த இன வகைப்படுத்தல்கள் பார்க்கப்படுவதில்லை. உங்களிடமிருந்து இனம், மொழி, மதம் போன்ற பல்வேறு விதங்களில் வேறுபடும் மக்களோடு உங்கள் அன்றாடத் தொடர்புகள் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்குக் அவர்களைக் குறித்த எதிர்மறை எண்ணங்கள் குறையும். இதுவே ‘தொடர்பு கோட்பாடு’ (Contact Theory). பல இனங்கள் கலந்து வசிப்பதைத் திட்டமிட்டும் கட்டாயமாகவும் உறுதிப்படுத்தும் நமது வீடமைப்புப் பேட்டைகளில் இக்கோட்பாடு குறிப்பிடத்தக்க அளவுக்குச் செயல்பட்டுள்ளதாகவே தெரிகிறது. உள்ளூர் மக்களுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையே அன்றாட ஊடாட்டங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஊக்குவிக்கவும் முனைந்தால் ஒருங்கிணைவு மேம்பாட்டில் சாதகமான தாக்கத்தை விளைவிக்கலாம்.
பண்டையத் தமிழரின் புத்தாண்டு தையா, சித்திரையா, ஆவணியா?

வாதத்துவக்கம்
சில ஆண்டுகளுக்கு முன்பு, சித்திரை முதல் நாளன்று சமூக ஊடகத்தளமொன்றில் நான் தமிழ்ப் புத்தாண்டையொட்டிய ஒரு வாதத்தில் சிக்கிக் கொண்டேன். சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு கிடையாது, இது இந்துக்களின் புத்தாண்டு என்று சிலர் சாதித்தனர். நானோ சமணர்களும் பௌத்தர்களும் இதனைக் கொண்டாடும் பொழுது (Balbir 2020) எந்த வகையில் இதனை இந்துக்களின் புத்தாண்டு எனக் கூறமுடியும் என வாதிட்டேன். அதோடு இந்து என்கின்ற அடையாளம் அண்மையில் தோன்றிய அடையாளமாகும். இது தமிழ்ச் சொல் கூட கிடையாது. இருந்தாலும் தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு என்னும் திண்ணமான நம்பிக்கை சிலாிடம் நிலவி வருகின்றது. இதற்கு ஆதாரமாகத் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்னும் பழமொழியைச் சுட்டிக்காட்டுவர். அதோடும் பொங்கலுக்குத்தான் பழைய பொருட்களைக் கழித்துக்கட்டும் வழக்கமும் வெள்ளையடிப்பதும் உண்டு. இது நியாயமான வாதம்தான் – ஆனால் இந்த வாதம் மட்டும் போதுமா?
வேளாண்குடியினரைப் பொறுத்தவரையில் பொங்கல்தான் முதன்மை பெற்ற விழா என்று கூறலாம். ஜாதிமத வேறுபாடுகளையும் கடந்து சமூக விழாவாக பொங்கல் விளங்குகிறது. ஆனால் பொங்கல் தமிழர்களின் புத்தாண்டாகுமா? இந்த வாதத்திற்கான ஆதாரங்கள் என்ன? பொங்கலையொட்டிக் கல்வெட்டுச் சாசனங்கள், இலக்கியக் குறிப்புகள் அல்லது அகழ்வாராய்ச்சி தரும் செய்திகள் ஏதேனும் உண்டா? புத்தாண்டையொட்டிய இந்தச் சர்ச்சை எப்பொழுது துவங்கியது?

பெயரும் பொருளும்
ஒருவரது அடையாளத்தின் முக்கியக் குறியீடு அவரது பெயரேயாகும். இருப்பினும், அதன்பின் உள்ள பொருளை அறிய முனைவதில்லை. பல்லினக் கலாச்சாரங்களைக் கொண்ட சமூகத்தில் வாழ்ந்தாலும், பிற இனத்தினர் பெயரிடும் வழக்கங்களை நாம் அறிந்திருக்கவில்லை என்றே கூறவேண்டும். தொடக்கமாக, இந்தியச் சமூகத்தின் பெயர் வைக்கும் பழக்கங்கள் குறித்து அறிவோம். இந்தியப் பெயர்கள் குறித்த ஓர் அறிமுகப் பயணத்தைச் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் மூத்த நூலகர் மலர்விழி இளங்கோவன் நமக்கு வழங்குகிறார்.
[This article was first published in the Singapore Libraries Bulletin by the Library Association of Singapore in October 2021, and reproduced here with permission.]
பெயர்கள் பலவிதம்!
ஒருவர்தம் பெயர் அவர்தம் அடையாளத்தைக் குறிப்பதில் மிகமுக்கிய இடம்பெற்றுள்ளது. இருப்பினும், பெயரில் அடங்கியுள்ள பல்வேறு சிறப்பம்சங்களை நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. அதோடு, பல்லினப் பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்தாலும், நாம் பெரும்பாலும் பெயர்களில் புதைந்துள்ள வழக்காறுகளை உணர்ந்து வைத்திருப்பதுமில்லை. நமது இந்தியச் சமூகத்தின் தனிநபர் பெயர்களில் உள்ள வழக்காறுகளைத் தெரிந்துகொள்வதற்கான அறிமுகம் இது. தேசிய நூலக வாரியத்தின் மூத்த நூலகரான மலர்விழி இளங்கோவன், இந்தியப் பெயர்கள் குறித்த ஓர் அறிமுகப் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லவிருக்கிறார்.
இக்கட்டுரை, சிங்கப்பூர் நூலக மன்றத்தால் (Library Association of Singapore) சிங்கப்பூர் நூலகங்களுக்கான இதழில் (Singapore Libraries Bulletin) முதன்முதலாக அக்டோபர் 2021-இல் வெளியிடப்பட்டது. இங்கு மறுபதிப்புச் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துர்கா பூஜையின் வரலாறு

துர்காதேவி, அசுர குல அரசன் மகிஷாசுரனை வதம்செய்வதைக் கொண்டாடுவதே துர்கா பூஜை என்று அழைக்கப்படுகிறது. நிலஞ்சானா குப்தா வழிநடத்திய இவ்விணையக் கருத்தரங்கில், சிங்கப்பூரில் துர்கை வழிபாட்டைச் சார்ந்த பல்வேறு வழக்கங்களைப்பற்றியும் துர்கா பூஜை பண்டிகையைப்பற்றியும் நாளடைவில் ஏற்பட்டுள்ள அதன் உருமாற்றத்தைப்பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. இப்பண்டிகைக்கும் சமூகத்தின் வழக்கமான நவராத்திரி, சரஸ்வதி போன்ற பூஜைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறியலாம்.



series
Story of Durga Puja
Durga Puja celebrates the victory of the goddess Durgaover the demon king Mahishasura. This webinar by Nilanjana Gupta offers insights about the various practices associated with the worship of Durga in Singapore as well as the observance of the festival and its transformation over the years. Please note the similarities and differences between the Tamil community practice of Navarathri and Saraswathi Puja.

நினைவுமலர்
தமிழ்மொழியில் ‘நினைவுமலர்‘ எனப்படுவது நினைவுகளைக் கொண்ட நூலை அல்லது நினைவுகளைக் கொண்ட மலர்க்கொத்தைக் குறிக்கிறது. இது மறைந்தவர்களுக்கான ஓர் அஞ்சலி. நினைவுமலர்களை வெளியிடுவது இலங்கைத் தமிழர் சமூகத்தில் பல்லாண்டுக்கால வழக்கமாயினும், மற்றத் தமிழ்ச் சமூகங்களில் அதிகம் கடைப்பிடிக்கப்படாத ஒன்றே. இக்கட்டுரையில், இவ்வழக்கத்தைப் பற்றிய சுவாரசியமான அம்சங்களைக் காண்பீர். (இலங்கைத்) தமிழர் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த அறிஞரால் எழுதப்பட்டுள்ளது. முனைவர் அருண் பாலா மெய்யியல் துறையில் தேர்ச்சிபெற்று, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்திலும் டொராண்டோ பல்கலைக்கழகத்திலும் கற்பித்துள்ளார். முனைவர் பாலா, நாகரீகங்களின் உரையாடலைக் குறித்த தலைப்பில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். நம் பண்பாட்டின் பல்வேறு அம்சங்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்தில் ‘சிந்தனைக்கு விருந்து’ என்னும் அங்கம் இடம்பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைப் படித்து மகிழ்வீர்கள் என நம்புகிறோம்.
இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை முனைவர் அருண் பாலாவுடன் arun.bala@yahoo.com மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்ள வரவேற்கிறோம்.
Ninaivumalar in Tamil refers to a Book of Memories or Bouquet of Memories. It is a tribute to the departed. The publication of Ninaivumalars is a long tradition among the Ceylon (Sri Lankan) Tamil Community but uncommon among other Tamils. In this essay, you will find some fascinating aspects of this special tradition. It is written by a leading scholar from the community. Dr Arun Bala is a philosopher by training and has taught at the National University of Singapore and University of Toronto. Dr Bala has published extensively on dialogue of civilisations. Hope you enjoy this offering in our series Food For Thought which is designed to bring different aspects of culture to our audience.
You’re welcome to share your comments and feedback with the author at arun.bala@yahoo.com